பட்டினத்தார்
TAGS:
pattinathar Couplet, ,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil songs,pattinathar,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar



இறந்த காலத்து இரங்கல்

தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று
எண்ணும் உணர்வு இல்லாமல் இன்பம் என்று மாண்டேனே.


தோல் எலும்பும் மாங்கிஷமும் தொல் அன்னத்தால் வளரும்
மேல் எலும்பும் சுத்தமென்று வீறாப்பாய் மாண்டேனே.


போக்கு வரத்தும் பொருள் வரத்தும் காணாமல்
வாக்கழிவு சொல்லி மனம்மறுகிக் கெட்டேனே.


நெஞ்சொடு புலம்பல்

மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.


புட்பாசன அணையில் பொன்பட்டு மெத்தையின் மேல்
ஒப்பா அணிந்த பணி யோடாணி நீங்காமல்!
இப்பாய்க் கிடத்தி இயமன் உயிர் கொள்ளும் முன்னே
முப்பாழைப் போற்ற முயங்கிலையே நெஞ்சமே!


முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும் பாழாய்
அப்பாழுக்கு அப்பால் நின்றாடும் அதைப் போற்றாமல்
இப்பாழாம் வாழ்வை நம்பி ஏற்றவர்க்கு ஒன்று ஈயாமல்
துப்பாழாய் வந்தவினை சூழ்ந்தனையே நெஞ்சமே!


அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவிசெயும்
சென்மம் எடுத்தும் சிவன் அருளைப் போற்றாமல்
பொன்னும் மனையும் எழில் பூவையரும் வாழ்வும் இவை
இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே!


முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்
இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே!
அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்
கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே.


மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு
ஆணிப்பொன் சிங்கா தனத்தில் இருந்தாலும்
காணித் துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால்
காணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே!


கற்கட்டும் மோதிரம் நல்கடுக்கன் அரை ஞாண் பூண்டு
திக்கு எட்டும் போற்றத் திசைக்கு ஒருத்தர் ஆனாலும்
பற்கிட்ட எமனுயிர் பந்தாடும் வேளையிலே
கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே!


முன்னம் நீ செய்த தவம் முப்பாலும் சேரும் அன்றிப்
பொன்னும் பணிதிகழும் பூவையும் அங்கேவருமோ?
தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல்
கண்ணற்ற அந்தகன்போல் காட்சியுற்றாய் நெஞ்சமே!


பை அரவம் பூண்ட பரமர் திருப் பொன்தாளைத்
துய்ய மலர் பறித்துத் தொழுது வணங்காமல்
கையில் அணிவளையும், காலில் இடும் பாடகமும்
மெய் என்று இறுமாந்து விட்டனையே நெஞ்சமே!


மாதுக்கு ஒரு பாகம் வைத்த அரன் பொன்தாளைப்
போதுக்கு ஒரு போதும் போற்றி வருந்தாமல்
வாதுக்குத் தேடி இந்த மண்ணில் புதைத்து வைத்தே
ஏதுக்குப் போக நீ எண்ணினையே நெஞ்சமே!


அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க
நெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன்;
வஞ்சகத்தை நீக்கி மறுநினைவு வராமல்
செஞ்சரணத் தானைச் சிந்தை செய்வாய் நெஞ்சமே!


அற்புதமாய் இந்த உடல் ஆவி அடங்கு முன்னே
சற்குருவைப் போற்றித் தவம் பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமை பெருவாழ்வை நம்பிச்
சர்ப்பத்தின் வாயில் தவளைபோல் ஆனேனே.


உற்றார்ஆர்? பெற்றார்ஆர்? உடன்பிறப்புஆர்? பிள்ளைகள்ஆர்?
மற்றார் இருந்தால் என்? மாளும்போது உதவுவரோ?
கற்றா இழந்த இளம் கன்றது போலே உருகிச்
சிற்றாகிச் சிற்றின்பம் சேர்ந்தனையே நெஞ்சமே!


வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே?


சந்தனமும், குங்குமமும், சாந்தும், பரிமளமும்
விந்தைகளாகப் பூசிமிகு வேடிக்கை ஒய்யாரக்
கந்த மலர் சூடுகின்ற கன்னியரும் தாம் இருக்க
எந்தவகை போனாய் என்று எண்ணிலையே நெஞ்சமே!


காற்றுத் துருத்தி கடியவினைக் குள்ளான
ஊற்றைச் சடலத்தை உண்டென்று இறுமாந்து
பார்த்திரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல்
ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே!


நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயம் என்றே எண்ணிப்
பாக்களவாம் அன்னம் பசித்தோர்க்கு அளியாமல்
போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் அப்போது
ஆர்ப்படுவார் என்றே அறிந்திலையே நெஞ்சமே!


சின்னஞ் சிறுநுதலாள் செய்த பலவினையால்
முன் அந்த மார்பின் முளைத்த சிலந்தி விம்மி
வன்னம் தளதளப்ப மயங்கி வலைக்குள்ளாகி
அன்னம் பகிர்ந்துண்ண அறிந்திலையே நெஞ்சமே.


ஓட்டைத் துருத்தியை, உடையும் புழுக்கூட்டை
ஆட்டும் சிவசித்தர் அருளை மிகப்போற்றியே
வீட்டைத் திறந்து வெளியைஒளி யால் அழைத்துக்
காட்டும் பொருள் இதென்றுகருதிலையே நெஞ்சமே!


ஊன்பொதிந்த காயம், உளைந்த புழுக்கூட்டைத்
தான் சுமந்த தல்லால்நீ சற்குருவைப் போற்றாமல்
கான் பரந்த வெள்ளம் கரைபுரளக் கண்டு ஏகி
மீன் பரந்தாற் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே!


உடக்கை ஒருக்கி உயிரை அடைத்துவைத்த
சடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை!
உடக்கைத் தகர்த்தே உயிரை எமன் கொள்கையிலே
அடக்கமாய் வைத்த பொருள் அங்குவர மாட்டாதே.


தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை,
முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்,
பற்றிப்பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
சுற்றி இருக்கும்வினை சூழ்ந்தனையே நெஞ்சமே!


அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்
வஞ்சகமாய் உற்றமுலை மாதர்வலைக் குள்ளாகிப்
பஞ்சரித்துத் தேடிப் பாழுக்கு இறைத்தோமே!


அக்கறுகு கொன்றைதும்பை அம்புலியும் சூடுகின்ற
சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்
மக்கள் பெண்டிர் சுற்றமுடன் வாழ்வை மிக நம்பி அன்பாய்
எக்காலமும் உண்டென்று எண்ணினையே நெஞ்சமே!


ஆண்ட குருவின் அருளை மிகப்போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்டகுழல் மாதுநல்லார் பொய்மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துடிகெண்டை ஆனேனே!


ஏணிப் பழுஆம் இருளை அறுத்தாளமுற்றும்
பேணித் தொழும் கயிலை பேறுபெற மாட்டாமல்
காண அரும் பொருளாய்க் கண்கலக்கப் பட்டடியேன்
ஆணிஅற்ற மாமரம் போல் ஆகினனே நெஞ்சமே!


கோத்துப் பிரகாசம் கொண்டுருகி அண்டமெல்லாம்
காத்தப் படியே கயிலாயம் சேராமல்
வேற்றுருவப் பட்டடியேன் வெள்ளம்போல் உள்ளுருகி
ஏற்றும் கழுவில் இருந்த பிணம் ஆனேனே!


நிலைவிட்டு உடலை உயிர் நீங்கி அகலுமுன்னே
சிலைதொட்ட வேடன் எச்சில் தின்றானைச் சேராமல்
வலைபட்டு உழலுகின்ற மான்போல் பரதவித்துத்
தலைகெட்ட நூல் அதுபோல் தட்டழிந்தாய் நெஞ்சமே.


முடிக்குமயிர்ப் பொல்லா புழுக்குரம்பை மின்னாரின்
இடைக்கும் நடைக்கும் இதம் கொண்ட வார்த்தைசொல்லி
அடிக்கொண்ட தில்லைவனத்து ஐயனே! நாய் அனையேன்
விடக்கை இழந்த மிருகமது ஆனேனே!


பூவாணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது
சீர்பாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்
தாவாரம் தோறும் தலைபுகுந்த நாய்போலே
ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே.


பத்தெட்டாய் ஈரைந்தாய்ப் பதின்மூன்று இரண்டொன்றாய்
ஒத்திட்டு நின்றதோர் ஓவியத்தைப் போற்றாமல்;
தெத்திட்டு நின்ற திரிகண்ணுக் குள்ளாக்கி
வித்திட்டாய் நெஞ்சே! விடவும் அறியாயே!


அஞ்சும் உருவாகி ஐம்முன்றும் எட்டும் ஒன்றாய்
மிஞ்சி இருந்த விளக்கொளியைப் போற்றாமல்
பஞ்சிலிடு வன்னியைப்போல் பற்றிப் பிடியாமல்
நஞ்சுண்ட கெண்டையைப்போல் நான் அலைந்து கெட்டேனே.


ஊனம் உடனே அடையும் புழுக்கட்டை
மானமுட னேசுமந்து மண்ணுலகில் மாளாமல்
ஆனதொரு பஞ்சவர்கள் ஆண்டிருந்த தேசம்விட்டுப்
போனதுபோ லேநாம் போய்பிழைத்தோம் இல்லையே.


ஊறா இறைக்கின்ற உப்பிருந்த பாண்டத்தை,
நாறாமல் நாறி நழுவும் புழுக்கூட்டை,
வீறாம் புறத்தை விரும்புகின்றது எப்படியென்
றாறாத நாட்டில் அகன்றிருந்தேன் இல்லையே.


அரிய அரிதேடி அறிய ஒரு முதலைப்
பரிவுடனே போற்றும் பரஞ்சுடரைப் போற்றாமல்
கரியபெரு வாழ்வை நம்பிக் காமத்து அழுந்தியே
அரிவாயில் பட்ட கரியது போல் ஆனேனே!


தந்திரத்தை உன்னித் தவத்தை மிகநிறுத்தி,
மந்திரத்தை உன்னி மயங்கித் தடுமாறி
விந்துருகி நாதமாம் மேல் ஒளியைக் காணாமல்
அந்தரத்தே கோல் எறிந்த அந்தகன் போல் ஆனேனே.


விலையாகிப் பாணனுக்கு வீறடிமைப் பட்டதுபின்
சிலையார் கை வேடன் எச்சில் தின்றானைப் போற்றாமல்
அலைவாய் துரும்பதுபோல் ஆணவத்தினால் அழுங்கி,
உலைவாய் மெழுகதுபோல் உருகினையே நெஞ்சமே!


பூரண மாலை

மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே!


உந்திக்கமலத்து உதித்துநின்ற பிருமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே!


நாவிக் கமல நடுநெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே!


உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே!


விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே!


நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே!


நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே!


உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே!


மூக்கு முனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கைகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே!


இடைபிங் கலையின் இயல்பறிய மாட்டாமல்
தடையுடனே யானும் தயங்கினேன் பூரணமே!





Meta Information:
pattinathar Couplet,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar