பட்டினத்தார்
TAGS:
pattinathar Couplet, ,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil songs,pattinathar,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar



திருத் தில்லை

நாலின் மறைப்பொருள் அம்பல வாணரை நம்பியவர்
பாலில் ஒருதரம் சேவிக்கொ ணாதிருப் பார்க் கருங்கல்
மேலில் எடுத்தவர் கைவிலங் கைத்தைப்பர் மீண்டுமொரு
காலில் நிறுத்துவர் கிட்டியும் தாம்வந்து கட்டுவரே.


ஆற்றொடு தும்பை அணிந்தாடும் அம்பல வாணர்தம்மைப்
போற்றா தவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்
சோற்றாவி அற்றுச் சுகமற்றுச் சுற்றத் துணியும் அற்றே
ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற் றிருப்பர்களே.


அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
நித்தனை, அம்மை சிவகாம சுந்தரி நேசனை, எம்
கத்தனைப் பொன்னம்பலத் தாடும் ஐயனைக் காணக்கண்
எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றனவே!


திருச்செங்காடு

நெருப்பான மேனியர் செங்காட்டில் ஆத்தி நிழல் அருகே
இருப்பார் திருவுளம் எப்படி யோஇன்னம் என்னை அன்னைக்
கருப்பா சயக்குழிக்கே தள்ளு மோகண்ணன் காணரிய
திருப்பாத மேதரு மோதெரி யாது சிவன்செயலே.


திருவொற்றியூர்

ஐயுந் தொடர்ந்து, விழியுஞ் செருகி, அறிவழிந்து,
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவெற்றி யூர்உடையீர்! திரு நீறுமிட்டுக்
கையுந் தொழப் பண்ணி ஐந்தெழுத் தோதவுங் கற்பியுமே.


சுடப்படு வார் அறி யார், புரம் மூன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில் தென்ஒற்றி யூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பதம் நந்தலை மேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மன மே விதி ஏட்டைக் கிழிப்பதுவே!


திருவிடைமருதூர்

காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன? உள்ளன்பி லாதவர் ஓங்குவிண்ணோர்
நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே.


தாயும் பகை கொண்ட பெண்டீர் பெரும்பகை தன்னுடைய
சேயும் பகை உற வோரும் பகைஇச் செகமும் பகை
ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில்இங் காதலினால்
தோயுநெஞ்சே மரு தீசர்பொற் பாதஞ் சுதந்தரமே.


திருக்கழுக்குன்றம்

காடோ? செடியோ? கடல்புற மோ? கனமே மிகுந்த
நாடோ? நகரோ? நகர்நடு வோ? நலமே மிகுந்த
வீடோ? புறந்திண்ணை யோ? தமி யேன்உடல் விழுமிடம்?
நீள்தோய் கழுக்குன்றி லீசா! உயிர்த்துணை நின்பதமே!


திருக்காளத்தி

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடைசுற்றி,
முத்தும் பவளமும் பூண்டுஓடி ஆடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கென்ன? காண் கயிலாபுரிக் காளத்தியே!


பொன்னால் பிரயோசனம்பொன் படைத்தார்க்குண்டு; பொன் படைத்தோன்
தன்னால் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு அத்தன் மையைப்போல்
உன்னால்பிர யோசனம் வேணதெல் லாம்உண்டு உனைப்பணியும்
என்னால்பிர யோசனம் ஏதுண்டு? காளத்தி ஈச்சுரனே!


வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்; மாதுசொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டு செய்து
நாளாறில் கண்இடந்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?


முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால்
செப்போது இளமுலை யாருடன் சேரவும் சீவன்விடும்
அப்போது கண்கலக் கப்படவும் வைத்தாய் ஐயனே!
எப்போது காணவல் லேன்? திருக் காளத்தி ஈச்சுரனே!


இரைக்கே இரவும் பகலும் திரிந்திங்கு இளைத்துமின்னார்
அரைக்கே அவலக் குழியருகே அசும் பார்ந்தொழுகும்
புரைக்கே உழலும் தமியேனை ஆண்டருள்! பொன்முகலிக்
கரைக்கே கல்லால நிழற்கீழ் அமர்ந்தருள் காளத்தியே!


நாறும் குருதிச் சலதாரை; தோற்புரை நாள் தொறும்சீ
ஊறும் மலக்குழி காமத்துவாரம் ஒளித்திடும்புண்
தேறும் தசைப்பிளப் பந்தரங் கத்துள சிற்றின்பம்விட்டு
ஏறும் பதந்தருவாய்! திருக் காளத்தி ஈச்சுரனே!


திருக்கைலாயம்

கான்சாயும் வெள்ளி மலைக்கரசே! - நின் கழல் நம்பினேன்
ஊன்சாயும் சென்மம் ஒழித்திடு வாய்! கர வூரனுக்காய்
மான்சாய செங்கை மழுவலஞ் சாய வனைந்த கொன்றைத்
தேன்சாய நல்ல திருமேனி சாய்த்த சிவக் கொழுந்தே!


இல்லம் துறந்து பசிவந்த போது அங்கு இரந்து தின்று
பல்லும் கரையற்று, வெள்வாயு மாய்ஒன்றில் பற்றுமின்றிச்
சொல்லும் பொருளும் இழந்து சுகானந்தத் தூக்கத்திலே
அல்லும் பகலும் இருப்பாதென் றோ? கயி லாயத்தனே!


சினந்தனை யற்றுப் பிரியமும் தான் அற்றுச் செய்கையற்று
நினைந்ததும்அற்று, நினையா மையுமற்று, நிர்ச்சிந்தனாய்த்
தனந்தனி யேயிருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலில் என்றிருப்பேன் அத்தனே! கயிலாயத்தனே!


கையார ஏற்றுநின் றுஅங்ஙனந் தின்று, கரித்துணியைத்
தையா துஉடுத்தி, நின் சந்நிதிக்கே வந்து சந்ததமும்
மெய்யார நிற்பணிந்து உள்ளே உரோமம் விதிர்விதிர்ப்ப
ஐயா என்று ஓலம் இடுவது என்றோ? கயிலாயத்தனே!


நீறார்த்த மேனி உரோமம் சிலிர்த்து உளம் நெக்குநெக்குச்
சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி, நின்சீரடிக்கே
மாறாத் தியானமுற்று ஆனந்த மேற்கொண்டு, மார்பில் கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடப்பதென்றோ? கயிலாயத்தனே!


செல்வரைப் பின்சென்று சங்கடம்பேசித் தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமல் பரமானந்தத்தின்
எல்லையில் புக்கிட ஏகாந்தமாய் எனக் காமிடத்தே
அல்லல் அற்று என்றிருப்பேன் அத்த னே! கயிலாயத்தனே!


மந்திக் குருளையொத் தேன்இல்லை; நாயேன் வழக்கறிந்தும்
சிந்திக்கும் சிந்தையை யான்என்செய் வேன்எனைத் தீதகற்றிப்
புந்திப் பரிவில் குருளையை ஏந்திய பூசையைப்போல்
எந்தைக் குரியவன் காண் அத்த னே !கயி லாயத்தனே!


வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழிப்போய்ப்
பொருந்தேன் நரகில் புகுகின்றி லென், புகழ்வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன்இயல் அஞ்செழுத்தாம்
அரும்தேன் அருந்துவன் நின் அரு ளால்கயி லாயத்தனே!


மதுரை

விடப்படு மோ இப் பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம்
திடப்படு மோ? நின் அருளின்றி யேதினமே அலையக்
கடப்படு மோ? அற்பர் வாயிலில் சென் றுகண்ணீர் ததும்பிப்
படப்படு மோ? சொக்க நாதா! சவுந்தர பாண்டியனே!


பொது

உடைகோ வணம் உண்டு, உறங்கப் புறந்திண்ணையுண்டு, உணவிங்கு
அடைகாய் இலையுண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம்உண்டு இந்தமேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?


வீடு நமக்குத் திருவாலங் காடு; விமலர் தந்த
ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம்; ஓங்குசெல்வ
நாடு நமக்குண்டு கேட்பதெல்லாம்தர; நன்னெஞ்சமே!
ஈடு நமக்குச் சொலவே ஒருவரும் இங்கில்லையே!


நாடிக்கொண்டு ஈசரை நாட்டமுற் றாயிலை; நாதரடி
தேடிக்கொண் டாடித் தெளிந்தா யிலை; செக மாயைவந்து
மூடிக்கொண் டோமென்றும், காமாயு தங்கள் முனிந்தவென்றும்
பீடிப்பை யோநெஞ்ச மேயுனைப் போல இல்லை பித்தர்களே!


கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்வாய்? வினை தீர்த்தவனே!


கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப்
பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப் பல்பச்சிலையால்
எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே
மண்ணுண்டு போகுதை யோ! கெடுவீர் இந்த மானுடமே!


சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லிலு(ம்) மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர்
இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்!
கல்லிலும் செம்பிலு மோ இருப்பான் எங்கள் கண்ணுதலே?


வினைப்போகமே ஒரு தேகங்கண்டாய்! வினை தான் ஒழிந்தால்
தினைப்போ தளவும் நில் லாதுகண்டாய்! சிவன் பாதம்நினை!
நினைப்போரை மேவு; நினையாரை நீங்கி இந்நெறியில் நின்றால்
உனைப்போல் ஒருவருண்டோ மனமே எனக்கு உற்றவரே?


பட்டைக் கிழித்துப் பருஊசி தன்னைப் பரிந்தெடுத்து,
முட்டச் சுருட்டி என்மொய்குழ லாள்கையில் முன்கொடுத்து
கட்டியிருந்த கனமாய்க்காரி தன் காமம் எல்லாம்
விட்டுப் பிரியஎன் றோ இங்ங னேசிவன் மீண்டதுவே?


சூதுற்ற கொங்கையும் மானார் கலவியும் சூழ்பொருளும்,
போதுற்ற பூசலுக்கு என்செய லாம்? செய்த புண்ணியத்தால்
தீதுற்ற மன்னவன் சிந்தையில் நின்று தெளிவதற்கோ
காதற்ற ஊசியைத் தந்து விட்டான் என்றன் கைதனிலே?


வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!


வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்த வன்மொழி கேட்டிலையோ? செய்த புண்ணியத்தால்
ஆதித்தன் சந்திரன் போல வெளிச்சம் அதாம் பொழுது
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே!


மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில்மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே வழிக்கேது துணை?
தினையா மளவு எள்ளளவாகிலும் முன்பு செய்ததவம்
தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே.


அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு
கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு காடு மட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!


சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து
பாயும்; புடவை ஒன்றில்லாத போது பகல் இரவாய்
ஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவுபகல்
மாயும் மனிதரை மாயாமல் வைக்கமருந்தில்லையே !


சீதப் பனிக்குண்டு சிக்கெனக் கந்தை; தினம் இரந்து
நீ துய்க்கச் சோறு மனைதோறும் உண்டு, நினைவெழுந்தால்
வீதிக்கு நல்ல விலைமாதர் உண்டு; இந்த மேதினியில்
ஏதுக்கு நீசலித்தாய் மனமே என்றும் புண்படவே?


ஆறுண்டு; தோப்புண்டு; அணிவீதி அம்பலம் தானு முண்டு;
நீறுண்டு; கந்தை நெடுங்கோ வணமுண்டு; நித்தம் நித்தம்
மாறுண்டு உலாவி மயங்கும் நெஞ்சே! மனைதோறும் சென்று
சோறுண்டு தூங்கிப் பின் சும்மா இருக்கச் சுகமும் உண்டே!


உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில் ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழையவொரு வேட்டியுண்டு; சகம் முழுதும்
படுக்கப் புறந்திண்ணை யெங்கெங்கு முண்டு; பசித்து வந்தால்
கொடுக்கச் சிவனுண்டு; நெஞ்சே! நமக்குக் குறைவில்லையே!


மாடுண்டு; கன்றுண்டு; மக்களுண்டு என்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு எனும்படி கேட்டு விட்டோம் இனிக் கேள்மனமே!
ஓடுண்டு; கந்தையுண் டுள்ளேயெழுத் தைந்தும் ஓதவுண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையு முண்டே!


மாத்தா னவத்தையும் மாயா புரியின் மயக்கத்தையும்
நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தன் அன்பு கொண்டு
வேர்த்தால் குளித்துப் பசித்தால் புசித்து விழி துயின்று
பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே !


ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.


நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்பு பொம்மல்
ஆட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்த சந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே !


என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே


திருவேடம் ஆகித் தெருவில் பயின் றென்னைத் தேடிவந்த
பரிவாகப் பிச்சை பகருமென் றானைப்பதம் பணிந்தேன்
கருவாகும் ஏதக் கடற்கரை மேவக் கருதும் என்னை
உருவாகிக் கொள்ள வல்லோ இங்ங னேசிவன் உற்றதுவே


விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன்
கிட்டேன் அவர் உரை கேட்டும் இரேன் மெய் கெடாத நிலை
தொட்டேன் சுகதுக்கம் அற்றுவிட்டேன் தொல்லை நான் மறைக்கும்
எட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே!


அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்று கண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே.


எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும்
சரி எனக் கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க
நரி எனக் கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன்; இதனால் என்ன பேறு எனக்கே?





Meta Information:
pattinathar Couplet,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar