பட்டினத்தார்
TAGS:
pattinathar Couplet, ,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil songs,pattinathar,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar



திருவேகம்பமாலை

வரிக்கோல வேல்விழி யாரனுராக மயக்கிற்சென்று
சரிக்கோது வேனெழுத் தஞ்சுஞ் சொல்லேன்தமி யேனுடலம்
நரிக்கோ கழுகு பருந்தினுக் கோவெய்ய நாய்தனக்கோ
எரிக்கோஇரையெதுக்கோ இறைவாகச்சி ஏகம்பனே.


காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயைத உனை மறலிவிட்ட
தூதென்றுஎண் ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே.


ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.


சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு
கூறு முலையும் இறைச்சியுமாகிக் கொடுமையினால்
பீறு மலமும் உதிரமுஞ்சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங் கரைகண்டிலேன் இறைவாகச்சி ஏகம்பனே.


பொருளுடையோரைச் செயலிலும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற்குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங்கச்சி ஏகம்பனே.


பருத்திப்பொதியினைப் போலவேவயிறு பருக்கத்தங்கள்
துறுத்திக் கறுசுவை போடுகின்றார் துறந் தோர்தமக்கு
வருத்திஅமுதிட மாட்டாரவரை இம்மானிலத்தில்
இருத்திக்கொண் டேனிருந்தா இறைவாகச்சி ஏகம்பனே.


பொல்லாஇருளகற் றுங்கதிர்கூகையென் புட்கண்ணினுக்கு
அல்லாயிருந்திடும் ஆறொக்குமேஅறி வோருள்ளத்தில்
வல்லாரறிவார் அறியார்தமக்கு மயக்கங்கண்டாய்
எல்லாம் விழிமயக்கே இறைவாகச்சி ஏகம்பனே.


வாதுக்குச்சண்டைக்குப் போவார்வருவார் வழக்குரைப்பார்
தீதுக்குதவியுஞ் செய்திடுவார்தினந் தேடியொன்றும்
மாதுக்களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார் இறைவாகச்சி ஏகம்பனே.


ஓயாமற் பொய்சொல்வர் நல்லோரைநிந்திப்பர் உற்றுப்பெற்ற
தாயாரைவைவர் சதியாயிரஞ்செய்வர் சாத்திரங்கள்
ஆயார்பிறர்க்கு உபகாரஞ்செய்யார்தமை அண்டினர்க்கொன்று
ஈயாரிருந்தென்ன போயென்ன காண்கச்சி ஏகம்பனே.


அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத் தியல்பாய்த்
தப்பின்றி யேகுண வேற்றுமைதான் பல சார்தலினால்
செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரிலும்
இப்படியேநிற்பன் எந்தை பிரான்கச்சி ஏகம்பனே.


நாயாய்ப்பிறந்திடின் நல்வேட்டையாடி நயம்புரியும்
தாயார்வயிற்றில் நரராய்ப் பிறந்துபின் சம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங் குளமுங் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை ஏன்படைத்தாய் கச்சி ஏகம்பனே.


ஆற்றிற்கரைத்த புளியாக்கி டாமலென் அன்பையெல்லாம்
போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்
கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய் குன்ற வில்லுடையாய்
ஏற்றுக் கொடியுடையாய் இறைவாகச்சி ஏகம்பனே.


பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால்மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளியென் போதப் பொருள்பறிக்க
எண்ணா துனைமறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே.


நாவார வேண்டும் இதஞ் சொல்லுவாருனை நான்பிரிந்தால்
சாவேன் என்றேயிருந் தொக்கவுண்பார்கள் கைதான்வறண்டால்
போய்வாரும் என்றுநடுத் தலைக்கே குட்டும் பூவையருக்கு
ஈவார் தலைவிதியோ இறைவாகச்சி ஏகம்பனே.


கல்லார் சிவகதை நல்லார் தமக்குக் கனவிலுமெய்
சொல்லார் பசித்தவர்க் கன்னங் கொடார் குருசொன்னபடி
நில்லார்அறத்தை நினையார்நின்னாமம் நினைவிற்சற்றும்
இல்லார் இருந்தென் இறந்தென் புகல் கச்சி ஏகம்பனே.


வானமுதத்தின் சுவையறி யாதவர்வண்கனியின்
தானமுதத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே
தேனமு தத்தின் தெளிவாயஞானஞ் சிறிது மில்லார்க்கு
ஈனமுதச்சுவை நன்றல்ல வோகச்சி ஏகம்பனே.


ஊற்றைச்சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றற் றுத்தியைச் சோறிடுந்தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே
ஏற்றுத் திரிந்து விட்டேன் இறைவாகச்சி ஏகம்பனே.


சொல்லால் வருங்குற்றஞ் சிந்தையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுஞ் தீங்குக ளாயவுமற்று
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.


முட்டற்ற மஞ்சளை எண்ணெயிற் கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளைஓலை விளக்கியிட்டுப்
பட்டப்பகலில் வெளிமயக்கே செய்யும் பாவையர்மேல்
இட்டத்தை நீ தவிர்ப்பாய் இறைவாகச்சி ஏகம்பனே.


பிறந்துமண் மீதிற் பிணியேகுடி கொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேன்மைய லாகிப்புன் மாதருக்குட்
பறந்துஉழன் றேதடு மாறிப்பொன்தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திட வோபணித்தா யிறைவாகச்சி ஏகம்பனே.


பூதங்க ளற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்
பேதங் குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முனற்றுக்
காதங் கரணங் களுமற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதங் களைந்திருப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே.


நல்லாய்எனக்கு மனுவொன்று தந்தருள் ஞானமிலாப்
பொல்லா எனைக்கொன்று போடும் பொழுதியல் பூசைசெபம்
சொல்லார் நற்கோயில் நியமம் பலவகைத் தோத்திரமும்
எல்லாமுடிந்தபின் கொல்லுகண் டாய்கச்சி ஏகம்பனே.


சடக்கடத் துக்கிரை தேடிப்பலவுயிர் தம்மைக்கொன்று
விடக்கடித் துக்கொண்டு இறுமாந்திருந்து மிகமெலிந்து
படக்கடித் தின்றுழல் வார்கடமைக்கரம் பற்றிநமன்
இடக்கடிக்கும் பொழுதேது செய்வார்கச்சி ஏகம்பனே.


நாறுமுடலை நரிப்பொதிச் சோற்றினை நான்தினமுஞ்
சோறுங்கறியும் நிரப்பியபாண்டத்தைத் தோகையர்தங்
கூறுமலமும் இரத்த முஞ்சோறுங் குழியில் விழாது
ஏறும்படி யருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே.


சொக்கிட் டரண்மனைப் புக்குட் டிருடிய துட்டர்வந்து
திக்குற்ற மன்னரைக் கேட்பது பொற்சிவ நிந்தைசெய்து
மிக்குக் குருலிங்க சங்கமம் நிந்தித்து வீடிச்சிக்கும்
எக்குப் பெருத்தவர்க் கென்சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.


விருந்தாக வந்தவர் தங்களுக்கன்னம் மிகக் கொடுக்கப்
பொருந்தார் வளம்பெற வாழ்வார் நின்னாமத்தை போற்றி நித்தம்
அருந்தா முலைப்பங்கர் என்னாத பாதகர் அம்புவியில்
இருந்தாவ தேதுகண்டாய் இறைவாகச்சி ஏகம்பனே.


எல்லாம்அறிந்து படித்தே இருந்தெமக்கு உள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லால் மலைந்துறு சூழ் விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன்செயலே என்பர்காண்கச்சி ஏகம்பனே.


பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவர் பூவையன்னாள்
தன்னைநினைந்து வெகுவாய்உருகுவர் தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப்பூசி யாத உலுத்தரெல்லாம்
என்னை இருந்துகண்டாய் இறைவாகச்சி ஏகம்பனே.


கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரைக்
கொடும் பவமேசெயும் நிர்மூடர்தம்மைக் குவலயத்து
நெடும்பனைபோல் வளர்ந்துநல் லோர் தம் நெறியறியா
இடும்பரை யேன்வகுத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே.


கொன்றேன் அனேகம் உயிரையெலாம் பின்புகொன்றுகொன்று
தின்றேன் அதன்றியும் தீங்குசெய்தேனது தீர்க வென்றே
நின்றேனின் சன்னிதிக்கேஅத னாற்குற்றம் நீபொறுப்பாய்
என்றேஉனைநம்பினேன் இறைவாகச்சி ஏகம்பனே.


ஊரிருந் தென்ன நல்லோரிருந்தென் னுபகாரமுள்ள
பேரிருந் தென்பெற்ற தாயிருந்தென்மடப் பெண்கொடியாள்
சீரிருந்த தென்னற் சிறப்பிருந் தென்னவித் தேயத்தினில்
ஏரிருந் தென்னவல்லாய் இறைவாகச்சி ஏகம்பனே.


வில்லா லடிக்கச் செருப்பா லுதைக்க வெகுண்டொருவன்
கல்லா லெறியப் பிரம்பா லடிக்கக் களிவண்டுகூர்ந்து
அல்லாற் பொழிற்றில்லை அம்பலவாணர்க்கோர் அன்னைபிதா
இல்லாத தாலல்லவோ இறைவாகச்சி ஏகம்பனே.


அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பிள்ளை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய்வேன்கச்சி ஏகம்ப நாதனே


திருத் தில்லை

காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் தனித்துச் செத்துப்
போம்பிணந் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டு இனிமேற்
சாம்பிணங் கத்துது ஐயோ! என் செய்வேன் தில்லைச் சங்கரனே!


சோறிடும் நாடு, துணிதருங் குப்பை, தொண்டன் பரைக்கண்டு
ஏறிடுங் கைகள் இறங்கிடுந் தீவினை, எப்பொழுதும்
நீறிடும் மேனியர் சிற்றம் பலவர் நிருத்தங்கண்டால்
ஊறிடும் கண்கள் உருகிடும் நெஞ்சம்என் உள்ளமுமே!


அழலுக்குள் வெண்ணெய் எனவே உருகிப்பொன் னம்பலத்தார்
நிழலுக்குள் நின்று தவமுற் றாமல்நிட் டூரமின்னார்
குழலுக் கிசைந்த வகைமாலை கொண்டுகுற் றேவல்செய்து
விழலுக்கு முத்துலை இட்டிறைத் தேன் என் விதிவசமே.


ஓடாமல் பாழுக்கு உழையாமல் ஓரம் உரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர் கூட்டம் விடாமல்வெங் கோபம் நெஞ்சில்
நாடாமல் நன்மை வழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வம் தருவாய்! சிதம்பர தேசிகனே!


பாராமல் ஏற்பவர்க்கு இல்லையென் னாமல் பழுதுசொல்லி
வாராமல் பாவங்கள் வந்தணு காமல் மனம் அயர்ந்து
பேராமல், சேவை பிரியாமல் அன்புபெ றாதவரைச்
சேராமல் செல்வம் தருவாய்! சிதம்பர தேசிகனே!


கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், குத்திரங் கோள்களவு
கல்லாமல், கைதவ ரோடுஇணங் காமல்கனவி னும்பொய்
சொல்லாமல், சொற்களைக் கேளாமல், தோகையர் மாயையிலே
செல்லாமல், செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே!


முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம்உய்ய வேண்டுமென்றே அறி வாரில்லையே!


காலை உபாதி மலஞ்சலமாம் அன்றிக் கட்டுச்சியிற்
சால உபாதி பசிதாகம் ஆகும்முன் சஞ்சிதிமாம்
மாலை உபாதி துயில்காமமாம் இவை மாற்றிவிட்டே
ஆலம் உகந்தருள் அம்பலவா, என்னை ஆண்டருளே!


ஆயும் புகழ்த்தில்லை அம்பலவாணர் அருகில் சென்றால்
பாயும் இடபம், கடிக்கும் அரவம், பின்பற்றிச் சென்றால்
பேயுங் கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்;
போயென்செய் வாய்மனமே பிணக் காடவர் போமிடமே?


ஓடும் எடுத்து அதள் ஆடையும் சுற்றி, உலாவிமெள்ள
வீடுகள் தோறும் பலிவாங்கியே, விதி யற்றவர்போல்
ஆடும் அருள்கொண்டு இங்கு அம்பலத்தே நிற்கும் ஆண்டிதன்னைத்
தேடுங் கணக்கென்ன காண்! சிவகாம சவுந்தரியே.


ஊட்டுவிப் பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை
காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப் பானும் ஒருவன்உண் டேதில்லை அம்பலத்தே!


அடியார்க்கு எளியவர் அம்பலவாணர் அடிபணிந்தால்
மடியாமல் செல்வ வரம்பெற லாம், வையம் ஏழளந்த
நெடியோனும் வேதனுங் காணாத நித்த நிமலன் அருள்
குடிகாணும் நாங்கள்! அவர்காணும் எங்கள் குலதெய்வமே!


தெய்வச் சிதம்பர தேவா! உன் சித்தம் திரும்பிவிட்டால்
பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியுமெங்கே?
மெய்வைத்த செல்வமெங்கே? மண்ட லீகர்தம் மேடையெங்கே?
கைவைத்த நாடக சாலையெங்கே? இது கண்மயக்கே!


உடுப்பானும் பாலன்னம் உண்பானும் உய்வித்தொருவர் தம்மைக்
கெடுப்பானும் ஏதென்று கேள்விசெய் வானும் கதியடங்கக்
கொடுப்பானும் தேகிஎன்று ஏற்பானும் ஏற்கக் கொடாமல் நின்று
தடுப்பானும் நீயல்லையோ தில்லை ஆனந்தத் தாண்டவனே!


வித்தாரம் பேசினும் சோங்கேறி னும் கம்ப மீதிருந்து
தத்தாஎன் றோதிப் பரிவுகொண்டாடினும் தம்முன்தம்பி
ஒத்தாசை பேசினும் ஆவதுண்டோ? தில்லை யுள்நிறைந்த
கத்தாவின் சொற்படி அல்லாது வேறில்லை கன்மங்களே.


பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும்; பிறந்துவிட்டால்
இறவா திருக்க மருந்துண்டு காண்இது எப்படியோ
அறமார் புகழ்த்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம்
மறவா திருமனமே! அதுகாண் நல் மருந்துனக்கே!


தவியா திரு நெஞ்சமே தில்லை மேவிய சங்கரனைப்
புவியார்ந் திருக்கின்ற ஞானா கரனைப் புராந்தகனை
அவியாவிளக்கைப் பொன்னம்பலத் தாடியை ஐந்தெழுத்தால்
செவியாமல் நீ செபித்தால் பிறவாமுத்தி சித்திக்குமே!





Meta Information:
pattinathar Couplet,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar