பட்டினத்தார்
TAGS:
pattinathar Couplet, ,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil songs,pattinathar,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar



பூரண மாலை

வானில் கதிர்மதியாய் வளர்ந்துபின் ஒன்று ஆனதுபோல்,
ஊன் உடலுக் குள்ளிருந்த உயிர்ப்பறியேன் பூரணமே!


பொய்யும் புலையும் மிகப் பொருந்திவீண் பேசலன்றி
ஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே!


நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப்
பரம் அதுவே என்னப் பதம் அறியேன் பூரணமே!


கொல்வாய், பிறப்பிப்பாய்; கூட இருந்தே சுகிப்பாய்;
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே!


வாரிதியாய், வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்டம் எல்லாம்
சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே!


வித்தாய், மரமாய், வெளியாய், ஒளியாய் நீ
சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே!


தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால்
உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே!


ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே!


நேற்று என்றும் நாளை என்றும் நினைப்புமறப் பாய்ப்படைத்தும்
மாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே!


மனம்புத்தி சித்தம்மகிழ் அறிவு ஆங்காரமதாய்
நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே!


உருப்பேதம் இன்றி உய்ந்தசப்த பேதமதாய்க்
குருப்பேத மாய்வந்த குணம் அறியேன் பூரணமே!


சட்சமய பேதங்கள் தான்வகுத்துப், பின்னும்ஒரு
உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே!


முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்துபடைத்து உள்ளிருந்த
செப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே!


என்னதான் கற்றால்என்? எப்பொருளும் பெற்றால்என்?
உன்னை அறியாதார் உய்வரோ? பூரணமே!


கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப்
பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே!


வான்என்பார்; அண்டம்என்பார்; வாய்ஞான மேபேசித்
தான் என்பார் வீணர்; தனை அறியார் பூரணமே!


ஆதி என்பார்; அந்தம் என்பார்; அதற்குள்நடுவாய் இருந்த
சோதிஎன்பார்; நாதத் தொழில் அறியார்; பூரணமே!


மூச்சென்பார்; உள்ளம் என்பார்; மோனம்எனும் மோட்சம்என்பார்
பேச்சென்பார்; உன்னுடைய பேர் அறியார்; பூரணமே!


பரம்என்பார்; பானுஎன்பார்; பாழ்வெளியாய் நின்ற
வரம்என்பார்; உன்றன் வழி அறியார்; பூரணமே!


எத்தனை பேரோ எடுத்தெடுத்துத் தான் உரைத்தார்;
அத்தனை பேர்க்கு ஒன்றானது அறிகிலேன்; பூரணமே!


நகார மகாரம் என்பார்; நடுவே சிகாரம் என்பார்
வகாரயகாரம் என்பார்; வகை அறியார் பூரணமே!


மகத்துவமாய்க் காம மயக்கத்துக் குள்ளிருந்து
பகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே!


உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல்
பெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன், பூரணமே!


வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காயம் எடுத்துக் கலங்கினேன்! பூரணமே!


சந்திரனை மேகமது தான் மறைத்த வாறது போல்
பந்தமுற யானும்உனைப் பார்க்கிலேன்; பூரணமே!


செந்தா மரைத்தாளைத் தினந்தினமும் போற்றாமல்
அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன்நான் பூரணமே!


நீர்மேல் குமிழிபோல் நிலையற்ற காயம் இதைத்
தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன்; பூரணமே!


நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு
வஞ்சகத்தைப் போக்க வகை அறியேன்; பூரணமே!


எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன்; பூரணமே!


மாயாப் பிரபஞ்ச மயக்கத்தி லேவிழுந்தே!
ஓயாச் சனனம் ஒழிந்திலேன்; பூரணமே!


பூசையுடன் புவன போகம்எனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே!


படைத்தும் அழித்திடுவாய்; பார்க்கில் பிரமாவெழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீ வியாய்த் துலங்குவிப்பாய்; பூரணமே!


மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த
தந்திரத்தை நான் அறியத் தகுமோ தான் பூரணமே!


அல்லாய்ப் பகலாய் அனவரத காலம் எனும்
சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன்; பூரணமே!


நரகம் சுவர்க்கம்என நண்ணும் இரண்டு உண்டாயும்
அரகரா என்பது அறிகிலேன்; பூரணமே!


பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு
ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன்; பூரணமே!


சாந்தம் என்றும், கோபம் என்றும், சாதிபேதங்கள் என்றும்
பாந்தம் என்றும், புத்தியென்றும் படைத்தனையே; பூரணமே!


பாசம் உடலாய்ப் பசு அதுவும் தான்உயிராய்
நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே, பூரணமே!


ஏதில் அடியார் இரங்கி இகத்தில் வந்துன்
பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே!


நானேநீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியது போல் தெவிட்டாய்நீ பூரணமே!


முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேனே; பூரணமே!


பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு
தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய்; பூரணமே!


நெஞ்சொடு மகிழ்தல்

அன்று முதல் இன்றளவும் ஆக்கையொடு சூட்சியுமாய்
நின்ற நிலை அறிய நேசமுற்றாய், நெஞ்சமே!


அங்கங்கு உணர்வாய் அறிவாகி யே நிரம்பி
எங்கெங்கும் ஆனதிலே ஏகரித்தாய்; நெஞ்சமே!


அலையாத பேரின்ப ஆனந்த வெள்ளத்தில்
நிலையாய் உரு இருந்து நின்றனையே; நெஞ்சமே!


பாராமல் பதையாமல் பருகாமல் யாதொன்றும்
ஓராது உணர்வுடனே ஒன்றினையே; நெஞ்சமே!


களவிறந்து, கொலையிறந்து, காண்பனவும் காட்சியும்போய்
அளவிறந்து நின்றதிலே அன்புற்றாய் நெஞ்சமே!


பேச்சிறந்து, சுட்டிறந்து, பின்னிறந்து, முன்னிறந்து,
நீச்சிறந்து நின்றதிலே நேசமுற்றாய்; நெஞ்சமே!


விண்ணிறந்து, மண்ணிறந்து, வெளியிறந்து, ஒளியிறந்து
எண்ணிறந்து நின்றதிலே ஏகரித்தாய்; நெஞ்சமே!


பார்த்த இடம் எங்கும் பரம் எனவே உள் புறம்பும்
கோத்தபடி உண்மையெனக் கொண்டனையே நெஞ்சமே!





Meta Information:
pattinathar Couplet,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar