பட்டினத்தார்
TAGS:
pattinathar Couplet, ,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil songs,pattinathar,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar



பூரண மாலை

ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே!


மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல்
பொய் வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே!


பெண்டுபிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை
உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே!


தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்துகளும்
உண்டென்று நம்பி உணர்வழிந்தேன் பூரணமே!


இந்த உடல் உயிரை எப்போதும்தான் சதமாய்ப்
பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே!


மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே!


சரியை கிரியா யோகம்தான் ஞானம் பாராமல்
பரிதிகண்ட மதியதுபோல பயன் அழிந்தேன் பூரணமே!


மண் பெண் பொன்னாசை மயக்கத்திலே விழுந்து
கண்கெட்ட மாடதுபோல் கலங்கினேன் பூரணமே!


தனிமுதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல்
அநியாயமாய்ப் பிறந்திங்கு அலைந்து நின்றேன் பூரணமே!


ஈராறு தன் கலைக்குள் இருந்து கூத்து ஆடினதை
ஆராய்ந்து பாராமல் அறிவழிந்தேன் பூரணமே!


வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காசிவரை போய்த்திரிந்து கால் அலுத்தேன் பூரணமே!


கருவிகள் தொண்ணூற்றாறில் கலந்து விளையாடினதை
இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே!


உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
கடல்மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே!


எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பம் என்று
உற்றுனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே!


எத்தனை தாய் தந்தை இவர்களிடதே இருந்து
பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே!


பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் யானும்; உன்றன்
பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே!


உற்றார் அழுது அலுத்தார், உறன் முறையார் சுட்டலுத்தார்;
பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் பூரணமே!


பிரமன் படைத்து அலுத்தான்; பிறந்து இறந்து நான் அலுத்தேன்;
உரமுடைய அக்கினிதான் உண்டு அலுத்தான் பூரணமே!


எண்பத்து நான்கு நூறாயிரம் செனனமும் செனித்துப்
புண்பட்டு நானும் புலம்பினேன் பூரணமே!


என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே!


கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய்
அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே!


செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல்
பம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே!


எனக்குள்ளே நீ இருக்க, உனக்குள்ளே நான் இருக்க,
மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே!


எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடினதைப்
பழுதறவே பாராமல் பயன் இழந்தேன் பூரணமே!


சாதி பேதங்கள் தனை அறிய மாட்டாமல்
வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே!


குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான்
மலபாண்டத் துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே!


அண்டபிண்டம் எல்லாம் அணுவுக்கு அணுவாய் நீ
கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே!


சகத்திரத்தின் மேல் இருக்கும் சற்குருவைப் போற்றாமல்
அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே!


ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்
நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே!


என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய்,
உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே!


நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே!


சிலந்தியிடை நூல்போல் சீவசெந்துக் குள்ளிருந்த
நலந்தனைத்தான் பாராமல் நலம் அழிந்தேன் பூரணமே!


குருவாய், பரமாகிக் குடிலை, சத்தி நாதவிந்தாய்,
அருவாய் உருவானது அறிகிலேன் பூரணமே!


ஒளியாய்க் கதிர்மதியாய் உள் இருளாய் அக்கினியாய்
வெளியாகி நின்ற வியன் அறியேன் பூரணமே!


இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழு முனையாய்
உடல் உயிராய் நீ இருந்த உளவறியேன் பூரணமே!


மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து
காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே!


உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே!


தாயாகித் தந்தையாய்த் தமர்கிளைஞர் சுற்றம் எல்லாம்
நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே!


விலங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக்
குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே!


ஆணாகிப், பெண்ணாய், அலியாகி, வேற்றுருவாய்,
மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே!


வாலையாய்ப், பக்குவமாய், வளர்ந்து கிழம் தானாகி,
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே!


பொய்யாய்ப் புவியாய்ப், புகழ்வா ரிதியாகி
மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே!


பூவாய் மணமாகிப், பொன்னாகி, மாற்றாகி,
நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே!


முதலாய் நடுவாகி, முப்பொருளாய், மூன்றுலகாய்,
இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே!


ஊனாய் உடல் உயிராய், உள் நிறைந்த கண்ணொளியாய்த்
தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே!


வித்தாய், மரமாய், விளைந்த கனியாய்ப், பூவாய்ச்
சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே!


ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம் எல்லாம்
தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே!


மனமாய்க் கனவாகி, மாய்கையாய், உள்ளிருந்து
நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே!


சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச்
சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே!


பொறியாய்ப், புலன் ஆகிப், பூதபேதப் பிரிவாய்,
அறிவாகி நின்ற அளவறியேன் பூரணமே!





Meta Information:
pattinathar Couplet,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar