பாம்பாட்டிச் சித்தர்
TAGS:
pambatti Couplet,பாம்பாட்டிச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pambatti padalgal in tamil lyrics,devotional songs,Poet pambatti siddhar



செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச்
சித்தப்பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம்
குண்டுகட் டெருமை யேறுங் கூற்றுப் பருந்தைக்
கொன்றுதின்று விட்டோமென் றாடாய் பாம்பே.


வட்டமுலை யென்றுமிக வற்றுந் தோலை
மகமேரு என்றுவமை வைத்துக் கூறுவார்
கெட்டநாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தோர்
கெடுவரென்றே நீதுணிந் தாடாய் பாம்பே.


மலஞ்சொரி கண்ணைவடி வாளுக் கொப்பாக
வருணித்துச் சொல்வார்மதி வன்மை யில்லாதார்
குருநலம் பேசுகின்ற கூகைமாந்தர்கள்
கும்பிக்கே இரையாவரென் றாடாய் பாம்பே.


சிக்குநாறுங் கூந்தலைச் செழுமை மேகமாய்ச்
செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்
நெக்குநெக்கு ருகிப்பெண்ணை நெஞ்சில்நினைப்பார்
நிமலனை நினையாரென் றாடாய் பாம்பே.


நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும்
நண்ணுஞ்சளி நாசிதனை நற்கு மிழென்றும்
கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்
கோனிலையை யறியாரென் றாடாய் பாம்பே.


மயிலென்றுங் குயிலென்றும் மாணிக்க மென்றும்
மானேயென்றும் தேனேயென்றும் வானமு தென்றும்
ஒயிலான வன்னமயிற் கொத்தவ ளென்றும்
ஓதாமற் கடிந்துவிட் றாடாய் பாம்பே.


மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக் கென்றும்
மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகை யென்றும்
கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண் டென்றும்
கழறாமற் கடிந்தோமென் றாடாய் பாம்பே.


பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும்
பூந்திருவே என்றுமென்றன் பொக்கிஷ மென்றும்
கோவையென்றுங் கோதையென்றுங் கோகில மென்றும்
கூறாமல் துறந்தோம்நாமென் றாடாய் பாம்பே.


மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்
மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும்
சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும்
தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே.


ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலினிலே உண்டை சேர்த்தே
வாய்த்தகுய வனார் பண்ணும் பாண்டம்
வறகோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே.


இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினு மந்தச் சூளை
அரைக்காசுக் காகாதென் றாடாய் பாம்பே.


பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேரறியவே மெத்த வீங்கிப்
பரியார மொருமாது பார்த்த போது
பையோடே கழன்றதென் றாடாய் பாம்பே.


சீயுமல முஞ்செறி செந் நீரும் நிணமுஞ்
சேர்ந்திடு துர்நாற்றமுடைக் குடமது உடைந்தால்
நாயுநரி யும்பெரிய பேயுங் கழுகும்
நமதென்றே தின்னுமென் றாடாய் பாம்பே.


நீரிலெழும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல
நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே
பாரிற் பல உயிர்களைப் படைத்த வன்றனைப்
பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே.


நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளுங்கழு வினுமதன் நாற்றம் போமோ
கூறுமுடல் பலநதி யாடிக் கொண்டதால்
கொண்ட மலம் நீங்காதென் றாடாய் பாம்பே.


காய்த்தமர மதுமிக்க கல்லடிப்படும்
கன்மவினை கொண்டகாயம் கண்டனை பெறும்
வாய்த்ததவ முடையவர் வாழ்பவ ரென்றே
வத்துத்திரு வடிதொழு தாடாய் பாம்பே.


பேசரிய நவவாயிற் பீற்றல் துருத்தி
பெருங்காற்றுள் புகுந்ததாற் பேச்சுண் டாச்சே
ஈசனிலை அறியாருக் கிந்தத் துருத்தி
எரிமண்ணிற் கிரைமென் றாடாய் பாம்பே.


மரப்பாவை போல வொரு மண்ணுருச் செய்து
வளமான சீவனென்னுஞ் சூத்திரம் மாட்டித்
திரைக்குள்ளி ருந்தசைப்போன் தீர்ந்த பொழுதே
தேகம்விழு மென்றுதெளிந் தாடாய் பாம்பே.


தசநாடி தசவாயு சத்த தாது
சார்ந்தமரக் கப்பலது தத்தி விழுமே
இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில்
எந்நாளும் ஓட்டத்துணிந் தாடாய் பாம்பே.


தாமரையி னிலையினிலே தண்ணீர் தங்காத
தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்
தூமணியாம் விளங்கிய சோதி பதத்தைத்
தொழுது தொழுதுதொழு தாடாய்பாம்பே.


கள்ளங் கொலை காமமாதி கண்டித்த வெல்லாம்
கட்டறுத்து விட்டுஞானக் கண்ணைத் திறந்து
தெள்ளிதான வெட்டவெளி சிற்சொ ரூபத்தைத்
தேர்ந்துபார்த்துச் சிந்தைதெளிந் தாடாய் பாம்பே.


சொல்லும்புளி யம்பழத்தி னோடு போலவே
சுற்றத்திருந் தாலுமவர் தொந்தங் களற்று
நில்லுமன மேநீபர நின்ம லத்திலே
நின்றுணைதான் வெறும்பாழென் றாடாய் பாம்பே.


சேற்றில் திரிபிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல்போல்
தேசத்தோ டொத்துவாழ்வார் செய்கை கண்டபின்
சாற்றுபர வெளிதனைச் சாரும் வழியே
தானடக்க வேணுமென் றாடாய் பாம்பே.


எண்ணெய்குந் தண்ணீர்க்குந் தொந்தமில்லா வாறுபோல்
எப்போதும் இப்புவியி லெய்த வேண்டும்
கண்ணுக்குக் கண்ணான வொளிகண்டு கொள்ளவே
கட்டறுத்து வாழ்ந்திடநின் றாடாய் பாம்பே.


கக்கிவிட்ட சோறுகறி கந்த மூலங்கள்
கண்களுக்கு சுத்தமான காட்சி போலவே
சிக்கிக்கொண்ட சகத்தினைச் சீயென் றொறுத்துச்
சீர்பாதங் காணத்தெளிந் தாடாய் பாம்பே.


கோபமென்னும் மதயானை கொண்ட மதத்தை
கூர்கொள்யுத்தி அங்குசத்தாற் கொன்று விட்டோங்காண்
தீபமென்னுஞ் சிற்சொரூப செய்ய பொருளைச்
சேர்ந்துறவு கொண்டோமென் றாடாய் பாம்பே.


நித்தியமென் னுமலையில் நின்று கொண்டோம்யாம்
நினைத்தபடியே முடித்து நின்மல மானோம்
சத்தியமாய் எங்கள் கடந்தானழி யாதே
சந்ததமும் வாழ்வோமென் றாடாய் பாம்பே.


மனமென்னுங் குதிரையை வாகன மாக்கி
மதியென் னுங்கடிவாளம் வாயிற் பூட்டிச்
சினமென்னுஞ் சீனிமேற் சீரா யேறித்
தெளிவிடஞ் சவாரிவிட் டாடாய் பாம்பே.


ஆசையென்னுஞ் செருப்பின்மேல் அடிமை வைத்தே
ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே
காசையெனுந் துர்குணத்திற் கனலைக் கொளுத்திக்
காலாகாலங் கடந்தோமென் றாடாய் பாம்பே.


காலனெனுங் கொடிதான கடும்ப கையைநாம்
கற்பமெனும் வாளினாலே கடிந்து விட்டோம்
தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம்
தற்பரங் கண்டோமென் றாடாய் பாம்பே.


தேனில் வீழ்ந்த ஈயைப்போலச் சிந்தை குலைந்து
திகையாமற் சிற்சொரூப தெரிச னைகண்டு
வானிற் பறந் திடச்சூத வான்ம ணிதீர்ந்து
வாயிற்போட் டேகநீநின் றாடாய் பாம்பே.


தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியும் கண்டேன்
சுத்தவெளிக் குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன்
தாக்கிய சிரசின்மேல் வைத்த பாதம்
சற்குருவின் பாதமென் றாடாய் பாம்பே.


ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பே
அரசடிப் பொந்திலே புகுந்து கொண்டாய்
வாலடி தன்னிலே பார்த்துப் பார்த்து
வாங்கியே தூங்கிநின் றாடாய் பாம்பே.


நாலு தெருவினிலே நாலு கம்பம்
நடுத்தெரு வினிலேயோ பொன்னுக் கம்பம்
போலும் விளங்குபொன்னுக் கம்பத்தி னுக்கே
பூமாலை சூட்டிநின் றாடாய் பாம்பே.


ஆழிபெயர்ந் தாலுமேரு மட்டேயலையும்
அடியோடு பெயர்ந்தாலு மன்றிக் கால
ஊழிபெயர்ந்து தாலுமதி யுண்மைப் படிக்கே
உறுதி பெயராதுநின் றாடாய் பாம்பே.


வாயுவினை இரையாக வாங்கி உண்டே
வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே
தேயுபிறை குளிர்காய்ந்து வெட்ட வெளியில்
திகைப்பறச் சேர்ந்துநின் றாடாய் பாம்பே.


மாசில்கதி வளையிலே மண்டல மிட்டே
மதியான பெரும்பட மடலை விரித்தே
ஆசில்பரா பரமான ஆதி பாதத்தை
அடுத்தடுத் தேதுதித் தாடாய் பாம்பே.


காடுமலை நதிபதி காசி முதலாய்க்
கால்கடுக்க ஓடிப்பலன் காணலாகுமோ
வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே
வேதாந்தத் துறையினின் றாடாய் பாம்பே.


எள்ளளவும் அன்பகத்தில் இல்லா தார்முத்தி
எய்துவது தொல்லுலகில் இல்லை யெனவே
கள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக்
கண்டு தொழுதேகளித் தாடாய் பாம்பே.


சூரியனைக் கண்டபனி தூர வோடல்போல்
சொந்தபந்தஞ் சிந்தபரி சுத்த தலத்தில்
ஆரியனைக் கண்டுதரி சித்தே யன்புடன்
அகலாமற் பற்றித் தொடர்ந் தாடாய் பாம்பே.


காந்தம்வலி யிரும்புபோல் காசில் மனத்தைக்
காட்சியான வஸ்துவுடன் கலக்கச்சேர்த்துச்
சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போலச்
சலியாமற் தொடர்ந்து நின் றாடாய் பாம்பே.


உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி
உலகத்தின் மூடர்களுக் குண்டோ உணர்ச்சி
புளியிட்ட செம்பிற்குற்றம் போமோ அஞ்ஞானம்
போகாது மூடருக்கென் றாடாய் பாம்பே.


திரளான போரிலூசி தேடல் போல்முத்தி
சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்
அருளான மூலகுரு வையர் செயலால்
ஆனந்தங் கொண்டோமென் றாடாய் பாம்பே.


ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல்
எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே.


தன்னையறிந் தொழுகுவார் தன்னை மறைப்பார்
தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னையொரு கடவுளைப் பேண நினையார்
பேரொளியைப் பேணுவாரென் றாடாய் பாம்பே.


பாலிற்சுவை போலுமெங்கும் பாய்ந்த வொளியைப்
பற்றுப்பொன் பற்றவைத்த பான்மை போலே
காலிற்சுழு முனைநின்று கண்டு கொண்டு
களித்துக் களித்துநின் றாடாய் பாம்பே.


தேக்கெடுத்தே ஓடும்வானத் தேனை உண்டபின்
தேகபந்தம் கொண்டனமித் தேச வாழ்வினை
ஓக்காளமென் றெண்ணிமிகு மோகை யுடனீ
உள்ளந் தெளிந்துநின் றாடாய் பாம்பே.


சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல
தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே.


சமயபேதம் பலவான சாதி பேதங்கள்
சகத்தோர்க்கே யல்லாதுசற் சாதுக் களுக்கோ
சிமயத்தி லேறினபேர் சித்த மாறுமோ
சித்தர்சித் தாந்தந்தேர்ந் தாடாய் பாம்பே.


பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ
பூமிவலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ
ஆசையற்ற காலத்திலே ஆதி வஸ்துவை
அடையலா மென்றுதுணிந் தாடாய் பாம்பே.





Meta Information:
pambatti Couplet,பாம்பாட்டிச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pambatti padalgal in tamil lyrics,devotional songs,Poet pambatti siddhar