அழுகணிச் சித்தர் பாடல்



கலித்தாழிசை

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலாப் பதியடியோ குதர்க்கந் தெருநடுவே
சாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா
விளையாட்டைப் பாரேனோ.

எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரரைவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகிறாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
நிலைகடந்து வாடுறண்டி.

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா
கோலமிட்டுப் பாரேனோ.

சம்பா அரிசியடி சாதஞ் சமைத்திருக்க
உண்பாய்நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துபோ லன்னமிட்டு முப்பழமுஞ் சர்க்கரையுந்
தித்திக்குந் தேனமிர்தம் என் கண்ணம்மா
தின்றுகளைப் பாறேனோ.

பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கி
செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா
கண்குளிரப் பாரேனோ.

எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ.

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்த கூடுவதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா
குடியோடிப் போகானோ.

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா
உன்பாதஞ் சேரேனோ.

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ

பையூரி லேயிருந்து பாழூரி லேபிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா
பாழாய் முடியாவோ.

மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா
கண்விழிக்க வேகாவோ.

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ

உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
வகைமோச மானேண்டி

மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி

காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
பாமவலி தொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
பாமவலி தொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
காமமலர் மூன்றும் என் கண்ணம்மா!
கண்ணெதிரே நில்லாவோ

தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றொல்லைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!
சாகிறண்டி சாகாமல்

பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!
பாசியது வேறாமோ

கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன

கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
காரணங்கள் மெத்தவுண்டே

சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!
இவ்வேட மானேண்டி

பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா!
தணலாக வேகுறண்டி

கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா!
கடுகளவு காணாதோ

பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன

ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
நொடியில்மெழு கானேனடி

தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ

அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ

உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்னம்மா
ஒத்திருந்து வாழேனோ

காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
மடிமேல் விழுந்ததென்ன

சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!
சிலையுங் குலையாதோ

புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ

வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
விழித்துவெளி காட்டாயோ

என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந் தனியனுமாய்த் தனித்திருக்கல் ஆச்சுதடி
முன்னம் இதுதெரிந்தால் முழுமோசம் போகேனே
இன்னவிதம் என்று என் கண்ணம்மா
எடுத்து உரைக்க லாகாதோ?

எல்லாரும் பட்டார்கள் இன்னவிடம் என்றறியேன்
பொல்லாங்கும் போச்சுதடி புலனும் மறந்துதடி
கல்லான என்மனது கரைந்திருக்கு மேயாகில்
எல்லாரும் வந்து என் கண்ணம்மா
எனக்குஏவல் செய்யாரோ.

என்னை எனக்கறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டேண்டி
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டபின்பு
என்னை அறியாமல் என் கண்ணம்மா
இருந்தேன் ஒருவழியாய்.

ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுத் தொலைத்தார்கள்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுவிட நாளானால்
பாதாள வத்துவெல்லாம் என் கண்ணம்மா
பக்கத்து இருக்காதோ.

கடல்நீரின் ஆழமதைக் கண்டுகரை யேறிவந்து
உடலும்உயி ரும்போல ஒத்தே இருந்தோமடி
உடலும்உயி ரும்போல ஒத்தே இருக்கையிலே
திடமா மயக்கம்வந்து என் கண்ணம்மா
சேர்ந்தது என் சொல்லாயோ?

கல்லுள் இருந்த கனல்ஒளியைக் காரணமாய்ப்
புல்லுள் இருந்துவந்த பொருளறியக் காணேன்டி
புல்லுள் இருந்த பொருளறியக் காணாட்டால்
வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா
மயங்கித் தவிக்குறண்டி.

பொற்பூவும் வாசனையும் போதம் அறிந்தோர்க்குக்
கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும்
கற்பூவும் வாசனையும் கண்டது உண்டே யாமானால்
பொற்பூவும் வாசனையின் என் கண்ணம்மா
புலன்கள் தெரியவேண்டி.

ஆதிமதி என்னும் அதின் விடாய் தான்அடங்கிச்
சோதிவிந்து நாதமெனச் சுக்கிலமாய் நின்றதடி
சோதிவிந்து நாமெனச் சுக்கிலமாய் நின்றாக்கால்
நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா
நிலைதெரிய மாட்டேனோ.

ஞானமிது நாற்பதையும் நலமாக வேதெரிய
மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன்;
மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள்
ஞானம் அடைவார்கள் என் கண்ணம்மா
நன்மைபெற்று வாழ்வார்கள்.

வாத கற்பம்

மூலம்நடுவீதி ஆத்தாளே மும்மண்டலத்து அமர்ந்த
நீலகண்ட வத்துவைத்தான் - ஆத்தாளே
நின்மலனைப் போற்றுவனே.

மேகத்தான் விந்தாச்சு - ஆத்தாளே
விசயரவிச் சுண்ணாம்பாம்
ஆகச் சிவநீரால் - ஆத்தாளே
அட்டசித்தி அவள்சக்தி.

இரவி முகத்தாலே - ஆத்தாளே
ஈசன் என்ற உப்பாச்சு
வருகங்கை தன்னாலே - ஆத்தாளே
மயமாகச் சுத்தம் செய்தே.

முந்தின உப்பிரண்டும் - ஆத்தாளே
முழுக்கல்லுப் பொன்னாகத்
தொந்திக்க இவ்விடைக்க - ஆத்தாளே
சூழ்சீனங் கால்சேர்த்து.

ஆறுதலச்செயநீர் - ஆத்தாளே
அதிலேகற் சுண்ணாம்பாம்
மீறுமிந்தச் சுண்ணாம்பில் - ஆத்தாளே
வீரமுடன் கற்பூரம்.

சாரநீரால் அரைத்து - ஆத்தாளே
தனிக்கவச மேபூசி
ஆறுவகைச் செயநீரால் - ஆத்தாளே
அதன்மேலே சுத்திவைக்க.

உப்பென்று அறியாரே - ஆத்தாளே
உலகத்தி லுள்ளோர்கள்
உப்பல்லோ சுண்ணாம்பாம் - ஆத்தாளே
ஊர்க்குள் விலைகூறுதடி.

சவ்வீரம் முப்புச்சுண்ணம் - ஆத்தாளே
தனிப்பூரம் மேற்பூசி
ஒவ்வாத பான்முகத்தில் - ஆத்தாளே
ஊடுருவச் சுண்ணாம்பாம்.

காரமிதில் ஏற்றலடி - ஆத்தாளே
கருஅறியார் தண்ணீரைச்
சீருடனே குத்தியடி - ஆத்தாளே
தீமுகத்தில் வாட்டிவிடு.




Meta Information:
kaduveli Couplet,அழுகணிச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,azhkkani padalgal in tamil lyrics,devotional songs,Poet azhkkani siddhar,azhkkanich siddhar